Monday, 11 March 2013
இரண்டு மனைவிகள் படுத்தும் பாடு !!
ஒன்றிருக்க ஒன்று வந்தால் !!
என்றும் அமைதி இல்லை !!
உலகெங்கும் வாழ்ந்து வரும் அன்புத் தமிழ் நெஞ்சங்களே!
முதற்கண் உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.!!
இன்றைய தினம் நான் தேர்ந்து எடுத்துள்ள எனது கட்டுரையின் தலைப்பு,மறைந்த கவியரசர் கண்ணதாசன் தனது வாழ்க்கைப் பயணத்தில் தான் அனுபவித்த இரண்டு மனைவிகளால் பெற்ற பெரும் துன்பத்தின் பயனாக அடைந்த துயரத்தின் ஆழ்ந்த வெளிப்பாடுகளை அந்த காலத்தில் வெளிவந்த "நெஞ்சில் ஓர் ஆலயம்"திரைப்படத்தில் வரும் ஒரு பாடலின் மூலமாக சமுதாயத்திற்கு அதனை மிக நாசூக்காகஎடுத்துஉரைத்தார்.அந்தப்பாடலில் வரும் வரிகளில் ஒன்றினைத்தான் நான் மேலே கட்டுரைத் தலைப்பாகக் குறிப்பிட்டிருக்கிறேன். பாடல் இதோ:-
"ஒருவர்மட்டும்குடியிருந்தால்என்றும்துன்பம் இல்லை. ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதி இல்லை. "
பொதுவாக கவியரசர் தான் உணர்ந்த உண்மைகளைப் பற்றி கவி எழுதும்போது அற்புதமாக வரிகளைப் படைத்திடும் ஆற்றல்,வல்லமைபெற்றவர் அவர் ஒருவரே.
மனித உடல்கூறுகள் பற்றிய ஆய்வுகளை நான் இப்பொழுது உங்கள் கவனத்தில் தருவதற்கு கடமைப் பட்டுள்ளேன்.
இறைவனின் படைப்பில் மனிதனின் அங்க அவயவங்களின் அமைப்பினை நாம் சற்று உற்று நோக்கிப் பார்த்தோமேயானால் ஒரு உண்மை உங்களுக்கு புலப்படும். அது எது?
இப்பொழுது நான் தலையில் இருந்து துவக்குகிறேன்.
மூளை இரண்டு அதாவது சிறு மூளை,பெரு மூளை.
கண்கள் இரண்டு,காதுகள் இரண்டு,
மூக்கிற்கு துளை இரண்டு,நாக்கு உள் நாக்கு வெளி நாக்கு இரண்டு,
கைகள் இரண்டு,நுரையீரல் இரண்டு,
சிறுநீரகம் இரண்டு,சிறு குடல் பெருங்குடல் இரண்டு, கால்கள் இரண்டு.
இதுபோல பெரும்பான்மையான மனித உறுப்புகள் இரண்டு இரண்டென படைத்த இறைவன் இதயம் மட்டும் ஒன்று வைத்தான்.அதையும் இடது பகுதி என்றுசொல்லப்படும் சக்தியின் பகுதியில் படைத்து மகிழ்ந்தான்.
அர்த்த நாரீஸ்வரர் வடிவில் வலது பக்கம் சிவனின் பகுதி என்றும் இடது பக்கம் பார்வதி தேவி பகுதி என்றும் புராணங்கள் நமக்கு எடுத்துச் சொல்லியுள்ளது.
அது ஒரு புறம் இருக்க, பெண்களின் பக்கம் இதயத்தினை ஏன் வைத்தான் அவன் என்று நான் சிந்தித்தபோது கிடைத்த விடை உன்
இதயத்தை மனைவியிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காகக் கூட இருக்கலாம்.
அந்தக் காலத்தில் வெளிவந்த மறைந்த திரைப்பட கலைஞர் ஜெய்சங்கர் நடித்த முதல் படமான " இரவும் பகலும்" என்ற படத்தில் ஒரு பாடல் வரும்.
உள்ளத்தின் கதவுகள் கண்களடா!.
இங்கு உறவுக்கு காரணம் பெண்களடா!!.
உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்து விடு!.
அந்த ஒருத்தியை உயிராய் மதித்துவிடு !! என்று.
வான் புகழ் வள்ளுவர் கூட என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்த்தால்:-
அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை அக்தும் பிறன் பழிப்பதுஇல்லாயின் நன்று...........
என்று ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர்மூச்சை உள்ளடக்கி அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றும் கூறியுள்ளதை இங்கே நினைவு படுத்த ஆசைப் படுகிறேன்.
மனைவியை உண்மையான நேசத்துடனும் பாசத்துடனும் நேசிப்பவர்கள் எவரும் இரண்டாவது பெண் ஒருத்திக்கு தனது வாழ்வில் இடம் கொடுப்பது கிடையாது.அதனால் இடர்களை துன்பங்களை விலைக்கு வாங்குவதும் கிடையாது.
தயவு செய்து ஆண்கள் யாரும் கோபம் கொள்ளாமல் இருப்பார்களேயானால் நான் ஒரு கருத்தை இங்கே பதிவு செய்திட ஆசைப் படுகிறேன். ஆண்கள் நினைப்பதுபோல (இரண்டாவது பெண் வேண்டும்) அவரவர் மனைவியரும் நினைத்தால் நிலைமை என்னாகும்?எதிர்கால சமுதாயம்,நமது வாரிசுகளின் வாழ்க்கை இவை எல்லாம் கேள்விக் குறி ஆகிவிடாதா ?
எனது தந்தையார் அடிக்கடி ஒரு கருத்தை சொல்லிக்கொண்டே இருப்பார். அது என்னவென்றால் ஒரு குடும்பத்தில் தலைவன் சரியாக, நேர்மையாக, உண்மையாக, இல்லை என்றால் அந்த குடும்பமே சரியாக இருக்காது. ஏன் என்றால் தவறுகளை கண்டிக்கக் கூடிய தன்மை அவனைவிட்டு விடைபெற்று போய்விடுவதால்.
ஆகவே நான் இந்த கட்டுரையின் மூலமாக எதிர் கால இளைய சமுதாயத்தினரை வேண்டி விரும்பிக் கேட்டுகொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான். தயவு செய்து வாழ்வினில் நல்ல பெண்ணாக ஒருத்தியோடு மட்டும் மன நிறைவு காணுங்கள். தேவை இல்லாமல் அடுத்ததிற்கு ஆசைப் பட்டு உள்ள நிம்மதி,அமைதி இவைகளை இழந்துவிட்டு பின்னர் தவிக்கும் நிலைதனை அடையாதீர்கள் என்பது மட்டுமே.
மீண்டும் கட்டுரையின் ஆரம்ப பாடலிலேயே இதை நான் நிறைவு செய்கிறேன்.
ஒருவர் மட்டும் குடியிருந்தால் என்றும் துன்பம் இல்லை. ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதி இல்லை!!
சிந்திப்பீர் !! செயல்படுவீர் !! நன்றி!வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
Labels:
உண்மை நிலை,
எண்ணம்,
கட்டுரை,
நாட்டுநடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment